எக்ஸைல்: த்ரிஷாவுக்கு ஒரு வேண்டுகோள்…
December 2nd, 2011
December 2nd, 2011
சமீபத்தில் ஷாருக் கானின் ஒரு படத்துக்காக அவர் செய்த விளம்பர யுத்திகளைப் பற்றி நண்பர்கள் ஆச்சரியத்துடனும், எரிச்சலுடனும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒரு நாவலுக்கும் அந்த அளவுக்கு விளம்பரம் தரப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு நாவல் வாசிப்பில் கலந்து கொண்ட ப்ரியங்கா சோப்ரா அதன் ஒரு அத்தியாயத்தை வாசித்தது பற்றி பத்திரிகைகளில் படித்தேன். மும்பையில்தான் இப்படி நடக்கும். மலையாள சேனலில் கூட எக்ஸைல் பற்றி ஒரு மணி நேரம் கலந்துரையாடல் நடந்தது. யோசித்துப் பாருங்கள். ஒரு தமிழ் நாவலுக்கு மலையாள சேனல் கொடுக்கும் மரியாதை இது. இங்கே?
ப்ரியங்கா சோப்ரா மும்பையில் செய்வதை த்ரிஷா போன்றவர்கள் இங்கே தமிழில் செய்யலாமே? ப்ரியங்கா சோப்ராவே தமிழ் கற்றுக் கொண்டு சென்னை வந்து இலக்கிய வாசிப்பு செய்வதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாதது என்பதால் சொல்கிறேன். த்ரிஷாவின் தமிழை கமல்ஹாசனே பாராட்டியிருப்பதால் த்ரிஷாவுக்குக் கூடுதல் தகுதி உள்ளது.
விளம்பரம் வேண்டும். இல்லாவிட்டால் எக்ஸைல் என்ற நாவல் வரப் போவது பற்றி யாருக்குத் தெரியும்? சில கல்லூரிகளில் எக்ஸைல் நோட்டீஸ் விநியோகிக்கலாம் என்று நினைத்தேன். கைவசம் இருந்த நோட்டீஸ்கள் தீர்ந்து விட்டன. கல்லூரி மாணவ மாணவிகள் பலரும் இன்று சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற சிலரின் எழுத்துக்களும் அதற்கு ஒரு காரணம். ஆனால் இந்த இளைஞர்களுக்கு எக்ஸைல் என்ற நாவல் வெளிவர இருக்கும் செய்தியை யார் சொல்லுவது? எப்படிச் சொல்லுவது? இதுதான் என் அக்கறை.
தமிழின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான சீனு. ராமசாமி எக்ஸைலைப் படித்து விட்டேன். ட்ரைலருக்கு நான் தயார் என்று நேற்று போன் செய்தார். ட்ரைலர் இயக்குனர் கோவா ஃபில்ம் ஃபெஸ்டிவலில் இருக்கிறார். அவர் வந்ததும் சினிமா கலைஞர்களிடம் கருத்துக் கேட்டு ஒரு ட்ரைலர் தயாரிக்க வேண்டும்.
தில்லியில் நடந்த கருத்தரங்கில் எக்ஸைல் ட்ரைலர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது சந்தோஷம் அளிக்கிறது. ட்ரைலரின் நடிகை ஓவியாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அடுத்த ட்ரைலரில் கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment