Wednesday 24 September 2014

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன்.  அதற்குப் பல காரணங்கள்.  கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம்.  இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.  அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.  என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம்.  ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.
ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும்.  தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.  விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.  நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது.  அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே  கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?  அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?  இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?  அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.  ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?  கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?  ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும்  சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை.  பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது.  அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.
இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.  ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.  நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும்.  அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன்.  அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.  வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.  சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில்.  ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை.  ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.  ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள்.  அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்.  ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.
விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.   ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.  மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…
-----------------------------------------------------------------------------------

விஸ்வரூபம்

Hi Mr.Charu,
My name is Ravi Shankar and I have read few of your books including zero degree. I was deeply hurt by the comment you wrote against the movie Vishwaroobam. I have only one question for you. If the TamilNadu government appose the ‘Zero Degree’ book saying it has got sexual content and it cannot be sold to people with kids, would you still support the TN government? The point I’m making here is, I should have the freedom of speech and freedom of rights. I’m totally against censor board as well. I do not want 5 people decide what movie I can watch. Their job should only rate the movie like they do it in US. If Kamal makes a movie how RSS demolished Babri masjid and we should watch that as well.
Regards,
Ravi
டியர் ரவி,
நீங்கள் வருத்தம் அடைந்தது போல், காயப்பட்டது போல் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் விஸ்வரூபம் பார்த்துக் காயமடைந்து இருக்கிறார்கள்.  நான் ஒரு எழுத்தாளன் என்பதால் அந்தப் படத்தை ஒரு முஸ்லீமாகத்தான் பார்த்தேன்.  அந்தப் படத்தில் சென்ஸார் செய்வதற்கு எதுவும் இல்லை.  படம் முழுவதுமே இஸ்லாமிய விரோதப் பார்வைதான் இருக்கிறது.  ஆஃப்கனிஸ்தானில் எல்லா சிறுவர்களும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கா தானே?  அமெரிக்காக்காரன் தானே ரஷ்யாவை எதிர்ப்பதற்காக தாலிபான்களை வளர்த்து விட்டார்கள்?
ஒரு தமிழர் அமெரிக்க உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.   அதற்காக அவரை அறிஞர் என்று கொண்டாட முடியுமா?  மிமிக்ரி ஆர்டிஸ்ட் கூடத்தான் அப்படிப் பேசுவான்.  இல்லாவிட்டால் ஒருத்தர் அமெரிக்காவில் ஆறு மாதம் தங்கினால் அந்த உச்சரிப்புடன் பேச முடியும்.  அது ஒரு சாதனையா?  ஹாலிவுட் ஸ்டைலில் படம் எடுத்தால் அதற்குப் பெயர் சாதனையா?
இதை விடக் கொடுமை என்னவென்றால், படத்தின் ஆரம்பத்தில் பாப்பாத்திதான் சிக்கனை ருசி பார்த்து சொல்லணும் என்று வரும் வசனம்.  பாப்பாத்தி என்று சொல்வது சட்டப்படி குற்றம்.  ஒருவரை நீக்ரோ என்று சொல்வது எப்படிக் குற்றமோ அதே போன்ற குற்றம்தான் பாப்பாத்தி என்று சொல்வதும்.
என் விஸ்வரூபம் விமர்சனம் சம்பந்தமாக சுமார்  நூறு கடிதங்கள் வந்துள்ளன.   பாதி கடிதங்கள் என் கட்டுரையைப் பாராட்டி.  பாதி கடிதங்கள் என்னைக் கண்டித்து.  பாராட்டி எழுதியவர்கள் அத்தனை பேரும் முஸ்லீம்கள்.  கண்டித்து எழுதிய அத்தனை பேரும் இந்துக்கள்.  என் துபாய் நண்பர் கார்ல் மார்க்ஸ் மட்டுமே பாராட்டி எழுதிய இந்து நண்பர்.  மதத்தைத் தாண்டி சிந்திக்க முடியாத நாம் என்ன செய்து என்ன பயன்?  ரொம்பவும் அவமானமாக இருந்தது.  இந்தப் படம் பிராமணர்களையும் முஸ்லீம்களையும் எவ்வளவு கொச்சைப் படுத்துகிறது என்பதைக் கூடவா ஒருத்தரால் உணர முடியாது?  கமல் தன்னுடைய இஸ்லாமிய விரோத பார்வையை விஸ்வரூபத்தில் மட்டும் காட்டவில்லை.  ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்று ஏற்கனவே நிறைய செய்திருக்கிறார்.  அந்தப் படங்கள் பற்றிய என்னுடைய விரிவான விமர்சனங்களைப் படித்துப் பாருங்கள்.
நான் இப்போது தமிழ் சினிமாவுக்கு உள்ளே இருக்கிறேன் என்பதால் விஸ்வரூபத்துக்கு விரிவான விமர்சனம் எழுதவில்லை.  என்னால் என் நண்பர்கள் யாருக்கும் தொந்தரவு வரக் கூடாது என்று எண்ணுகிறேன்.  இனிமேல் விஸ்வரூபம் பற்றி எதுவும் எழுத மாட்டேன்.
எனக்கும் சென்ஸார் போர்டு இருக்கக் கூடாது என்பதுதான் எண்ணம்.  ஆனால் நம்முடைய நாடு அந்தப் பக்குவத்தை இன்னும் அடையவில்லை.  சென்ஸார் போர்டு இல்லாவிட்டால் 90 சதவிகிதம் நீலப் படங்கள்தான் வரும்.  வேண்டுமானால் சென்ஸார் போர்டில் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வைக்க வேண்டாம்.
சாரு


No comments:

Post a Comment