அன்புள்ள சாருவிற்கு பிரியங்களுடன் செந்தில் எழுதுவது .
நலம் . நீங்கள் அனுப்பிய குரியர் கிடைத்தது . சில நாட்களாக அதனை டைப் செய்ய முயற்சித்து வருகிறேன் . தமிழில் டைப் செய்வது கொஞ்சம் கடினமாக உள்ளது . இருந்தாலும் நானே டைப் செய்வது எனக்கு சந்தோஷம் என்பதால் நானே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
ராஸ லீலாவை இணையதளத்தில் படித்திருந்தாலும் புத்தகமாகப் படிக்கும்போதுதான் திருப்தியாக உள்ளது . அதை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம் . எத்தனை முறை படித்தாலும் புதுமையாக இருக்கிறது . பெருமாளை நினைத்தால் பொறாமைதான் ஏற்படுகிறது . நீங்கள் மிகவும் பொல்லாதவர் . குறும்பு மிக அதிகம் . பெருமாள் மேட்டூர் சென்றபோது மீன் சாப்பிடுகிறான் . மீனின் பெயர் rogue. மற்றுமொரு மீன் சங்கரா. இரண்டாவது மீன் மிகவும் அமைதியானது. முதல் மீன் கொஞ்சம் பிரச்சினையானது.
இங்குதான் பெருமாள் ஒரு வார்த்தை சொல்லுவான் -
மீனுக்குப் பெயர் மாற்றி வைத்துவிட்டார்கள் என்று. இந்தக் குறும்பு சாருவிற்கு மட்டுமே உரித்தானது.
அரசு அலுவலகங்களைப் போன்ற கொடுமையான இடங்களை வேறு எங்குமே பார்க்க முடியாது. மக்களுக்காகப் பணி புரியும் அரசாங்கத்தின் ஊழியர்களுக்கு ஒரு நல்ல கக்கூஸ் கிடையாது. இப்படிப் பட்ட இடத்தில் வேலை செய்பவன் எப்படிப் பொதுமக்களிடம் சிரித்த முகத்தோடு பேசுவான்? இந்தப் பகுதியையும், பெருமாள் இந்தியப் பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதியின் பேச்சுக்களைப் பற்றி நினைவு கூர்வதையும் சேர்த்துப் படித்தால் இந்திய நாட்டின் அவல நிலை புரியும்.
உங்களைப் படித்துப் படித்து நானும் உங்களைப் போலவே யோசிக்கிறேன் என்று நினைக்கிறேன். சமீபத்தில் ஆபீஸ் வேலையாக தாம்பரம் அருகில் உள்ள MEPZ -க்குச் சென்றிருந்தேன் . அங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களைப் பார்த்த போது அவர்களின் கழுத்துக்குக் கீழ்ப்பகுதி வற்றிப் போய் இருந்ததை பார்த்து அதிர்ந்தேன் . பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய BPO நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் டீ ஷர்ட் அணிந்தால் , அதனை நேருக்கு நேர் நின்று பார்த்தால் இதயம் இரண்டு துடிப்பையாவது இழந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. பெருமாள் ஒரு துணிக்கடையைப் பற்றிச் சொல்லுவான் . இதேபோல்தான் மிகப் பெரிய மருத்துவமனைகள் மற்றும் உங்கள் வீட்டுக் கோடியில் இருக்கும் நர்சிங் ஹோம் நிலையும் . எப்போதாவது நீங்கள் தியாகராய நகரில் உள்ள பாத்திரக்கடைக்கு சென்றாலும் இதே அதிர்ச்சிதான்.
தசாவதாரம் படம் பார்த்தேன். ஒன்று புரிந்தது. கமலுக்கு உழைக்கப் பிடிக்கும். இதில் கே.எஸ். ரவிக்குமார் தேவை எதற்கென்றால் கமல் மேக்கப்பில் இருந்தால் யார் ஷாட் வைப்பது ? American President என்று ஒரு படம். அதில் Michael Douglus பின்னியிருப்பார். 13 days என்று ஒரு படம்.
அதில் பாருங்கள், கென்னடியின் பாத்திரப்படைப்பை. தசாவதாரத்தில் புஷ் எதற்கு ? முகமூடி இருந்தது, ஒட்டிவிட்டார்கள். மை மத காம ராசன் தசாவதாரத்தை விட எவ்வளவோ மேல்.
ராஸ லீலா பற்றி நிறைய எழுதுவேன்.
செந்தில்
சென்னை.
------------------------------------------------
செந்திலுக்கு ஒரு வேண்டுகோள்.
கோபித்துக் கொள்ளாமல் தயவு செய்து நான் அனுப்பிய குரியரை எனக்கே மீண்டும் அனுப்பி வைக்கவும். எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் புரிகிறது. ஆனால் அதை அனுப்பி விட்டு நான் படுகிற பாடு எனக்குத்தான் தெரியும். நான் அந்தப் பக்கங்களை ஸெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டுதான் அனுப்பினேன். ஆனால் அந்த ஸெராக்ஸ் பக்கங்களை என்னுடைய புத்தகக் கிடங்குகளுக்குள் மீண்டும் தேடு தேடு என்று தேடிய போது கிடைக்கவில்லை. ஏனென்றால், செந்திலுக்கு அனுப்பிய குரியர் அவருக்குக் கிடைக்க நான்கு தினங்கள் ஆகி விட்டது. இதற்குள் குரியர் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் நடந்த நடை இருக்கிறதே, அது ஒரு கொடுமை. தொலைந்து போன ஸெராக்ஸ் பிரதிகளைத் தேடி வேறு தினமும் சுமார் அரை மணி நேரம் போய் விடுகிறது. இன்னும் அந்தக் காகிதங்கள் கிடைக்கவில்லை.
செந்திலுக்கு அனுப்பி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. அது சம்பந்தமான கவலைகளும் மன உளைச்சல்களும் வேறு என்னைப் பிய்த்துத் தின்று கொண்டிருக்கிறது. எனக்கு எத்தனையோ ஒத்தாசைகள் செய்தவர் செந்தில். அவருக்கும் தினசரி போன் போட்டு விசாரிப்புகள். “என் மனைவி இன்று அப்பக்கங்களை டைப் செய்வதற்காக DTP கொண்டு சென்றாள்; அங்கே மின்சாரம் இல்லை; இரண்டு மணி நேரம் காத்திருந்து விட்டு வந்து விட்டாள் ” என்று அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு அழுகையே வந்து விட்டது. நேற்று கூட என் புத்தகக் கிடங்கில் ஒரு மணி நேரம் தேடிப் பார்த்து விட்டு செந்திலுக்கு போன் போட்டேன்.
”தினமும் (இரவு) பனிரண்டு மணிக்கு வீட்டுக்குப் போய் (காலை) ஏழு மணிக்கெல்லாம் ஆபீஸ் கிளம்பி விடுகிறேன் சாரு; இதற்கிடையில் ஆபீஸ் டூர் வேறு; இன்றுதான் திரும்பினேன். இந்த ஞாயிறு எப்பாடுபட்டாவது நானே உட்கார்ந்து டைப் செய்யலாம் என்று இருக்கிறேன் ” என்றார். அவர் சொன்ன சோகக் கதையில் நான் எதற்காக அவருக்கு போன் போட்டேனோ அந்த விஷயத்தையே மறந்து விட்டு போனை வைத்து விட்டேன்.
நான் அவருக்கு சொல்ல நினைத்தது என்னவென்றால், ‘ நான் ஒரு நாளைக்கு நான்கு கட்டுரைகளை டைப் செய்து பதிவேற்றம் செய்கிறவன். எனக்கு இப்படி இரண்டு வாரம், நான்கு வாரம் எல்லாம் ஒத்து வராது; தயவு செய்து அந்தக் காகிதங்களை எனக்கே திருப்பி குரியரில் அனுப்பி வைத்தீர்களானால் மிக்க உதவியாக இருக்கும் ’ என்பதுதான்.
இந்தப் பிரச்சினையால் என்னுடைய நான்கு மணி நேரத் தூக்கம் கூட பிரச்சினையாகி விட்டது. ‘டேய் முட்டாப் பயலே; இதற்காக நீ இதோடு ஒரு ஏழெட்டு மணி நேரம் செலவழித்திருப்பாய் அல்லவா, இப்படி லோல் படுவதற்கு அதை நீயே டைப் செய்திருக்கலாமே? ’ என்று நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் என்னைத் தொந்தரவு செய்து எழுப்பி விட்டு விடும் என்னுடைய அந்த ரௌடி மனசாட்சி.
இதற்கிடையில் அமெரிக்காவிலிருந்து ஜெயந்தி எனக்குத் தேவையான விஷயங்களை டைப் செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். வீட்டுக்கே வந்து விட்டார் ஒரு கர்னாடக இசைக் கலைஞர் என்று எழுதியிருந்தேன் அல்லவா? அவர் பெயர் சோம சுந்தரம். சுருக்கமாக சோமன் என்று அழைப்பேன். சோமன் என்ற பெயரில் ஒரு ‘கிக் ’ இருக்கிறது. (சோம பானம்) அவர் என்ன செய்தார் தெரியுமா?
எனக்கு டைப் செய்து கொடுப்பதற்காக, மந்தைவெளி தெருவில் ஒரு வாடகை அறை எடுத்திருக்கிறார். ப்ரிட்டிஷ் கவுன்ஸில் நூலகத்தில் பொருட்களை ஏலம் விட்ட போது கணிப்பொறி, ஸ்கேனர் இன்ன பிற தளவாடங்களை வாங்கினார். எல்லாவற்றையும் அந்த அறையில் போட்டார். என்னையும் அழைத்துச் சென்று காண்பித்தார். இப்போது கணிப்பொறியை வைத்து டைப் செய்ய ஒரு மேஜையும், நாற்காலியும் வாங்க வேண்டும்.
அதற்கடுத்து, ஒரு முக்கியமான வேலையைச் செய்ய இருக்கிறார் சோமன். தட்டச்சு செய்வதற்காக சம்பளம் கொடுத்து ஒரு வேலையில்லாத இளைஞனைத் தேடப் போகிறார். அதுவும் அவன் எப்படி இருக்க வேண்டும்? “குடுங்க சார்; நீங்க குடுத்ததையெல்லாம் டைப் செய்து முடித்து விட்டேன்; சீக்கிரம் குடுங்க சார் ” என்று என்னை நச்சரிப்பவனாக இருக்க வேண்டுமாம்.
நான் சோமனிடம் சொல்லலாம் என்று இருக்கிறேன். ஏன் இளைஞன்; இளைஞியாகப் பாருங்கள் என்று. சே, உடனே தப்பர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். இளைஞன் என்றால் தம் அடிக்கப் போய் விடுவான்; நேற்று அடித்த ஓல்ட் மாங்க்கின் மப்பு அடங்கவில்லை என்று லீவு போட்டு விடுவான்.
நான் ஏதோ தமாஷுக்குச் சொல்வதாக நினைப்பீர்கள். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். எனக்கு ஸ்ரீபதி ஸ்ரீபதி என்று ஒரு நண்பர். பார்க்க அந்நியன் விக்ரம் மாதிரி இருப்பார். அதே மாதிரி உயரம், நிறம், சுருள் சுருளான நீண்ட தலைமுடி. அவர் தனக்கொரு வேலை வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் உடனே என் நண்பர் ஒருவரிடம் சொல்லி அவருக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணினேன்.
நண்பர் ஒரு தினசரியின் முதலாளி. ஆனால் நண்பரிடம் சொல்லி விட்டேன். “இதோ பாருங்கள்; நான் அனுப்பும் ஆள் தீவிரமான சிறு பத்திரிகை பார்ட்டி. எனவே ஏதாவது பிரச்சினை என்றால் என்னை நீங்கள் குறை சொல்லக் கூடாது. ” ஏனென்றால், சிறு பத்திரிகை பார்ட்டிகளுக்கு அவரிடம் சொல்லி வேலை வாங்கிக் கொடுத்ததில் ஏற்கனவே அவருக்கு மிகக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
நண்பரின் தினசரியில் ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப் பட்டதால் அவரும் ஓகே சொல்லி விட்டார். ஆனால் நான் மட்டும் திரும்பத் திரும்ப முன்பு சொன்ன எச்சரிக்கையை நினைவுறுத்திக் கொண்டே இருந்தேன். நண்பர் ” பரவாயில்லை; சமாளித்துக் கொள்ளலாம்; ஆனால் ஒரே ஒரு நிபந்தனை; நீ அவரை நம்முடைய சபைக்கு அழைத்து வந்து விடக் கூடாது ” என்றார். நானும் “எனக்கு ஏனய்யா வம்பு? ” என்று சொல்லி வாளாவிருந்து விட்டேன்.
ஸ்ரீபதி என் நண்பரின் அலுவலகத்திற்குச் சென்றார். வேலை நேரம், மதியம் இரண்டிலிருந்து நான்கு. அதாவது, மொழிபெயர்க்க வேண்டியது ஒன்றிரண்டு பத்திகள் மட்டுமே இருக்கும். அதை முடித்துக் கொடுத்து விட்டுக் கிளம்பி விடலாம். சமயங்களில் வேலை அரை மணி நேரத்தில் கூட முடிந்து விடும். சமயங்களில் ஒரு மணி நேரம் ஆகும். அவ்வளவுதான் வேலை. சம்பளம், முதல் மாதம் 5000 ரூ. இரண்டாவது மாதத்திலிருந்து 10,000 ரூ.
ஸ்ரீபதி வேலையில் சேர்ந்து ஓரிரண்டு தினங்கள் சென்று அவரிடம் “அலுவலகச் சூழல் எப்படி? ” என்று வினவினேன். “ஆகா, பிரமாதம். எல்லோரும் நட்புடன் பழகுகிறார்கள் ” என்றார். ஆனால் நான் ஸ்ரீபதிக்கு போன் போட்டால் “ஸ்ரீபதி என்று இங்கே யாரும் இல்லையே? ” என்றுதான் பதில் வரும். பிறகு நான் அடையாளம் எல்லாம் சொன்ன பிறகு “ஓ, அந்நியனா? ” என்று கேட்டு விட்டுக் கொடுப்பார்கள். அலுவலகத்தில் எல்லோரும் – முதலாளி உட்பட – அவர் முகத்துக்கெதிரே சார் என்றும், மற்றபடி அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது அந்நியன் என்றும் சொல்கின்றனர் என்று அறிந்து கொண்டேன்.
ஒருநாள் ஸ்ரீபதியிடம் “முதலாளி எப்படி? ” என்று கேட்டேன். “அவர் மனிதரே இல்லை; தெய்வம் ” என்றார். ‘ அப்படியா? ’ என்று கேட்டு விட்டு என் நண்பரிடம் அதைச் சொன்னேன். அது வேறொன்றுமில்லை. வேலையில் சேர்ந்த மறுநாளே என் நண்பரைச் சந்தித்து “கொஞ்சம் பணக் கஷ்டம் ” என்று தலையைச் சொறிந்திருக்கிறார் ஸ்ரீபதி. நண்பர் உடனே எதையும் யோசிக்காமல் 3000 ரூபாயை எடுத்துக் கொடுத்து ‘ முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள் ’ என்று சொல்லியிருக்கிறார்.
அடுத்த வாரம் போன் செய்தால் அந்நியன் ஆபீசுக்கு வரவில்லை என்றார்கள். அந்நியனையோ கைத்தொலைபேசியில் பிடிக்கவே முடியவில்லை. அந்த மாதத்தில் மட்டும் அந்நியன் ஆபீஸுக்குப் போனது பத்து நாட்களே இருக்கும் என்று தெரிந்து கொண்டேன்.
ஒருவாறாக ஆளை அமுக்கி “என்ன விஷயம்? ” என்று கேட்டேன். ” கணிப்பொறியின் முன் அமர்ந்ததுமே தலையைச் சுற்றுகிறது ” என்றார் அந்நியன்.
” அது நீங்கள் நேற்று அடித்த அரை பாட்டில் பிராந்தியாக இருக்கும்; ஹேங்க் ஓவர் ” என்றேன்.
” ம்ஹூம். பிராந்தி அடிக்காவிட்டாலும் சுற்றுகிறது ” என்றார்.
இப்படியே ஆள் ஆபீஸுக்கே போகாமல் தலை மறைவாக இருந்தார். கடைசியில் சுத்தமாகவே ஆபீஸ் போவதை நிறுத்தி விட்டார். வேலை கொடுத்த என் நண்பரிடமும் ஒரு மரியாதைக்கு “போய் வருகிறேன் ” என்று சொல்லிக் கொள்ளவில்லை.
ஒருநாள் ஸ்ரீபதியிடம் இது பற்றித் தோண்டித் துருவி விசாரித்தேன். என்ன பிரச்சினை என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
அதற்கு ஸ்ரீபதி “என்னங்க சாரு, அந்த ஆளு உங்க ஃப்ரெண்டு... ” என்று இழுத்தார்.
“ஐயோ, என்ன ஆச்சு ஸ்ரீபதி? ”
கொஞ்ச நாள் முன்புதானே தெய்வம் அது இது என்று சொன்னார்?
“அவுரு என்னங்க...தெனம் ஆஃபீஸ் வரச் சொல்றாரு... ”
இப்போது புரிகிறதா, சோமனிடம் நான் ஏன் இளைஞியாக வையுங்கள் என்று சொன்னேன் என்று?
செந்தில் என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது. தவறு என் மீதுதான். யார் யாரிடம் எதை எதை எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும். இது விஷயத்தில் எனக்கு ஏற்கனவே செமத்தியான ஒரு அனுபவம் உண்டு.
அவந்திகாவை நான் ஒரு தெய்வப் பிறவியாக மதிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். அவளைப் போன்ற உயர் குணங்கள் வாய்க்கப் பெற்ற மனுஷியை நீங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும்தான் பார்க்க முடியும். என்னைப் பொறுத்தவரை அவள் என் கடவுள். அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவள்தான் என் உயிர். அவள்தான் என் சுவாசம்.
ஒருமுறை அவளுக்கு எலி ஜூரம் (Leptospirosis) வந்து உயிருக்கே ஆபத்தாகி படுக்கையில் கிடந்த போது கார்த்திக் கூட தைரியமாக வேலை செய்து கொண்டிருந்தான். நானோ என் எழுத்தைக் கூட விட்டு விட்டு (ஆறு மாதங்கள் நான் எழுதவில்லை) அவளுடனேயே இருந்தேன். ஒரு கட்டத்தில் சோஃபாவில் உட்கார்ந்திருந்த போது கார்த்திக்கின் எதிரிலேயே என் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கணத்தை என்னால் மறக்கவே முடியாது.
இப்பேர்ப்பட்ட மனுஷியிடம் நான் ஒரு முக்கியமான விஷயத்தை எதிர்பார்க்க முடியாது. செக்ஸை விடுங்கள்; அது கிடக்கிறது கழுதை. நான் சொல்ல வந்தது செக்ஸை விடவும் அதி முக்கியமான வேறோர் விஷயம். பசித்த வயிறுக்கு சோறு. அது மட்டும் அவந்திகாவிடமிருந்து கிடைக்கவே கிடைக்காது. கிடைக்கும்; ஆனால் இப்போது செந்தில் செய்தது போல் காலம்தான் பிரச்சினை. நானோ அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து தியானத்தை முடித்து விட்டு வாக்கிங் கிளம்பிச் சென்று ஏழரை மணிக்குத் திரும்புவேன். பத்து நாள் பட்டினி கிடந்தது போல் பசிக்கும். வந்து பார்த்தால் அவந்திகா தூங்கிக் கொண்டிருப்பாள். அப்புறம் நானே ஓட்ஸ் கஞ்சியைக் காய்ச்சி குடிப்பேன்.
மதியம் எனக்கு அவ்வளவாகப் பசிக்காது. ஆனால் மணக்க மணக்க தளிகை தயாராக இருக்கும். காலையில் கொலைப் பசியில் கிடந்த போது கிடைக்காத அந்தச் சோறு யாருக்கு வேண்டும் என்று நினைத்து அந்தப் பக்கமே திரும்ப மாட்டேன்.
இரவு எனக்கு ஏழரைக்கு பசி வந்து விடும். அவந்திகாவோ இரவு பத்து மணிக்குத்தான் சாப்பாடு பற்றியே யோசிப்பாள். அலுவலகம் விட்டு ஆறு மணிக்கு வீடு திரும்பி, கொஞ்சம் பால் குடித்து விட்டு, ஸ்கூட்டியை எடுத்துச் சென்று மல்லிகைப் பூ வாங்கி வருவாள். உதிரிப் பூ. ஒரு கூடை நிறைய. அதையெல்லாம் பக்தி சிரத்தையாகத் தொடுப்பாள். ஏழு மணிக்குத் துவங்கும் இந்த பக்திப் பணி ஒன்பது ஒன்பதரை மணிக்கு முடிவடையும். ஏழெட்டு முழம் கட்டி முடித்திருப்பாள்.
“ஏன் இந்த வீண் வேலை? கட்டிய பூவையே நீ வாங்கிக் கொள்ளலாமே? ” என்று கேட்பேன்.
“இவ்வளவு நெருக்கமாக யார் கட்டுகிறார்கள் சொல்? ” என்பாள் பதிலுக்கு.
” சரி, அப்படியானால் ஐந்து முழம் வாங்குவதற்கு பத்து முழம் வாங்கிக் கொள்ளேன்? ”
“இப்படிப் பூத் தொடுப்பது எனக்கு ஒரு தியானம் போல் இருக்கிறது; எனக்கு மிகவும் பிடித்த வேலை இது. ”
“ஓ, பிடித்த வேலை என்றால் செய்ய வேண்டியதுதான் ” என்று சொல்லி விட்டுவிட்டேன். மனிதர்களுக்கு எது சந்தோஷம் தருகிறதோ அதைச் செய்வதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான்.
ஏழெட்டு முழம் கட்டி அதைப் பெருமாளுக்கும், பாபாவுக்கும் அணிவித்து மகிழ்வாள். அவள் தனக்குப் பூச்சூடிக் கொண்டு நான் பார்த்ததேயில்லை. திருமணமான புதிதில் கணவனுக்கான தலையாய கடமைகளில் மனைவிக்கு மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு போவதும் ஒன்று என்று என் நண்பர்கள் சொல்லியிருந்தபடியால் நான் அவந்திகாவுக்கு மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு போவதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் அவள் என்னைக் கண்டிப்பாள், பூக்காரப் பெண்களிடம் நான் மிகவும் ஏமாந்து போவதாக. வாங்கிக் கொண்டு போகும் பூவும் அவள் தலையில் ஏறாது. சாமிக்குத்தான் போகும். அப்படியெல்லாம் சாமி சேவை செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியால் நானும் பூ வாங்குவதை விட்டு விட்டேன்.
இந்த மலர்த் திருப்பணிக்குப் பிறகுதான் – இரவு பத்து மணிக்கு – உனக்கு என்ன வேண்டும் சாப்பாடு என்று கேட்பாள் அவந்திகா. நான் அதற்குள் கற்பகாம்பாள் மெஸ்ஸில் போய் சாப்பிட்டுவிட்டு வந்திருப்பேன். அல்லது, வீட்டிலேயே இலைதழைகளை சாப்பிட்டு முடித்திருப்பேன். இந்தப் பிரச்சினைக்காகத்தானே சின்மயா நகர் சுடுகாட்டிலிருந்து இந்த மைலாப்பூர் சொர்க்கத்துக்கு இடம் மாற்றிக் கொண்டு வந்தேன்?
சில ஆண்டுகளுக்கு முன்னால், இந்தச் சாப்பாட்டு விஷயமாக நானும் அவந்திகாவும் எங்கள் வீட்டில் அபூர்வமாக நடக்கும் வட்ட மேஜை மாநாட்டில் விவாதிப்பதுண்டு. அப்போது என் சோகங்களையெல்லாம் அவள் முன்னே கொட்டுவேன். அப்போது அவள் தன்னுடைய சோக வரலாற்றை எடுத்து விடுவாள். அவளுடைய அம்மா சித்த சுவாதீனம் இல்லாதவர் ஆதலால் அவள் பத்து வயதிலிருந்தே சமைக்கிறாள். இப்போது 45 வயது.
” நீயே நினைத்துப் பார்; ஒரு பெண் 35 ஆண்டுகளாக சமையல்கட்டே கதி என்று இருந்தால் அவளுக்கு அந்த வேலை நரகமாக இருக்காதா? ”
” நானும்தானே கண்ணே, பத்து வயதிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்? நாளுக்கு நாள் எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் அதிகமாகிக் கொண்டுதான் போகிறதே ஒழிய குறைய மாட்டேன் என்கிறதே? ”
” நீ செய்து பார், தெரியும். ”
” செய்து பார்த்தேனே, நன்றாகத்தானே இருந்தது? பத்து வருட காலம் செய்தேனே? இப்போதுதானே நேரம் இல்லாமல் அந்தப் பக்கம் வர முடியாமல் இருக்கிறது? ”
ம்ஹூம். காஷ்மீர் பற்றிய இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தையைப் போல் வட்ட மேஜை மாநாடு எந்த முடிவும் எடுக்கப் படாமல் முடிந்து போகும். இப்படியே இந்தப் பிரச்சினை ஓடிக் கொண்டிருந்த போது ‘அவந்திகாவை அடுப்பங்கரையிலிருந்து விடுவிப்பது எப்படி? ’ என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.
சமையலுக்கு ஒரு ஆள் வைக்கலாம் என்று ஒரு யோசனை பிறந்தது. அவந்திகா இதைக் கேட்டதுமே மறுதலித்தாள். மீண்டும் மீண்டும் வட்ட மேஜை மாநாடு கூடியதன் பேரில் கடைசியாக ஒத்துக் கொண்டாள்.
” ஒரு ஸ்வீட் சிக்ஸ்டீனாக வைக்கலாம் ” என்றேன். பயங்கர கோபமாகி விட்டாள். ” 18 வயதுக்கு உட்பட்டவர்களை வீட்டு வேலைக்கு வைத்தால் உன்னை உள்ளே தள்ளி விடுவார்கள் ” என்றாள்.
” சரி, அப்படியானால் 18 டூ 25? ”
” ஓகே. வைத்துக் கொள். என்னை விவாகரத்து செய்து விடு. ”
ஓ மை காட். என்ன இவள் புரியாமல் பேசுகிறாள்?
80 வயதுப் பெண்ணாக இருந்தால் நல்லது என்பது அவந்திகாவின் யோசனை.
”80 வயதுப் பெண்ணை பெண் என்று சொல்ல மாட்டார்கள்; கிழவி என்றுதான் சொல்வார்கள்; மேலும், 80 வயது மூதாட்டியை இப்படிக் கொடுமைப் படுத்தினால் உனக்கு மறு ஜென்மத்திலும் கஷ்டம்தான் தொடரும் ” என்றேன்.
பயந்து விட்டாள். ” சரி, ஒரு 60 வயது பெண்ணாகப் பார்க்கலாம். ”
கடைசியில் ஒரு 30 வயதுப் பெண்தான் கிடைத்தார். சமையல் அற்புதம். ஆனால் நான் வாயே திறக்கவில்லை. ” எப்படி இருக்கிறது? ” என்று முகத்தை அஷ்ட கோணலாக சுளித்துக் கொண்டு கேட்டாள் அவந்திகா. நானா சிக்குவேன்?
“சுமார். ”
” என்னது சுமாரா? வாந்தி வருது. ”
ஒரு வாரம் அந்த அற்புதமான சாப்பாட்டை வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லாமல் ரசித்துச் சாப்பிட்டேன். ‘ வாந்தி வருகிறது ’ என்று நானும் சொல்ல வேண்டும் என்று எவ்வளவோ எதிர்பார்த்தாள் அவந்திகா. அவள் எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றாமல் போகவே, ஒருநாள் அந்தப் பெண்ணிடம் சென்று “உப்பைக் குறை; புளியைக் குறை; மிளகாயைக் குறை; அதை அப்படிப் பண்ணு; இதை இப்படிப் பண்ணு ” என்று ஆயிரத்தெட்டு உத்தரவுகள் பிறப்பித்தாள்.
” இப்படியெல்லாம் செய்தால் அது குழம்பாக இருக்காதே; வெந்நீராக அல்லவா வரும்? ” என்று கேட்டேன்.
“உனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடாதே சாரு ” என்று சொல்லிவிட்டாள்.
நான் நினைத்ததைப் போலவே அன்று வெந்நீராகவே இருந்தது குழம்பு. இதே போல் ஒவ்வொரு அய்ட்டமாக அந்தப் பெண்ணைக் குழப்பி அடித்து பதினைந்தே நாளில் ‘ சம்பளம் கூட வேண்டாம்; ஆளை விட்டால் போதும் ’ என்று ஓடியே போய் விட்டாள் அந்தப் பெண்.
திரும்பவும் அடுப்படி ராஜ்ஜியம் அவந்திகாவின் ஆளுகைக்குள் வந்தது. நான் பார்த்தேன். எத்தனை நாள் பட்டினி கிடப்பது? காலையில் ஓட்ஸ் கஞ்சி. இரவில் ராயர் கஃபே. மதியம் விதவிதமாகச் சமைத்து வைத்திருப்பாள். எனக்குத்தான் மதியம் பசிக்காதே? அதனால் இரண்டு சோளக் கதிரை அவித்துத் தின்று விட்டு அவள் செய்து வைத்ததை சீந்தவே சீந்தாமல் அப்படியே வைத்து விடுவேன்.
நேற்று காலை என்ன நடந்தது தெரியுமா?
காலை ஐந்தரைக்கு நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்று நடந்தேன். ஏழு மணி ஆயிற்று. பார்த்தால் பூங்காவின் உள் பகுதியில் ஒரு ஆலமரத்தடியில் இருந்த கல்தரையில் அமர்ந்து தேவாரம் பாடிக் கொண்டிருந்தார் சோமன். பக்கத்தில் சுருதிப் பெட்டி. சுந்தரர்.
பாடி முடித்ததும் “இதற்காகத்தான் மைலாப்பூரை சொர்க்கம் என்று சொல்கிறேன் சோமன் ” என்றேன்.
அவர் சொன்னார். ” சுஜாதா ஒரு கதையில் எழுதியிருப்பார்: அவன் மதுமிதாவால் பல் தேய்த்து, மதுமிதாவால் கொப்பளித்து, மதுமிதாவைக் குடித்து, மதுமிதாவைச் சாப்பிட்டான் ’ என்று. அதுபோல நீங்கள் இந்த உலகத்தின் சந்தோஷத்தை மட்டுமே பார்த்து, சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்து, சந்தோஷத்தில் மட்டுமே வாழ்கிறீர்கள். ”
” திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் ’ என்பார்களே; ஒரு திருவாசகப் பாடல் பாடுங்களேன் ” என்றேன் சோமனிடம்.
மனிதர் சமத்காரமாகப் பேச்சை மாற்றி விட்டார். பிறகு அங்கிருந்து கிளம்பி கச்சேரி ரோடு வந்தோம். சோமன் ஒரு சைக்கிள் வைத்திருக்கிறார். பொறாமையாக இருந்தது. எனக்கு மட்டும் சைக்கிள் விடத் தெரிந்திருந்தால் சைக்கிள்தான் என் வாகனம். அதுவும் அலுமினிய நிறத்தில்.
” ராயர் கஃபே போகலாமா? ” என்று கேட்டார் சோமன்.
” அடப்பாவி, அதைத்தானே நான் இரண்டு வருடமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்! ” என்றேன்.
25 ஆண்டுகளுக்கு முன்னால் நான் அடிக்கடி ராயர் கஃபேவுக்குச் செல்வதுண்டு. மணியன், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., சோ போன்றவர்கள் வெளியே இருக்கும் திறந்த வெளியில் நின்று கொண்டிருப்பார்கள். எப்போதும் ராயர் கஃபேயில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். விறகு அடுப்புதான். கையில் கர்சீஃப் கட்டாயம் இருக்க வேண்டும். உள்ளே புகையில் கண்களிலிருந்து சிலருக்குக் கண்ணீர் வரும். புகையில் எல்லாம் அரையிருட்டாகத்தான் இருக்கும்.
காலை மாலை மட்டும்தான். சோறு சாப்பாடு எல்லாம் கிடையாது. டிஃபன் மட்டும்தான். அப்படி ஒரு அற்புதமான பிராமண டிஃபனை ஒருவர் இந்த உலகில் எந்த மூலையிலும் சாப்பிட்டிருக்க முடியாது. காஃபியும் அப்படியே. அங்கே அப்போது ஒருவர் இருந்தார். அய்ட்டங்களை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவருடைய மூளை மட்டும் கணக்கை எண்ணிக் கொண்டே இருக்கும். நாம் சாப்பிட்டு விட்டு கல்லாவின் முன் நிற்கும் போது “அண்ணாவுக்குப் பதினெட்டு ரூபாய், ஐம்பது பைசா ” என்று மிகச் சரியாக சொல்லுவார். எத்தனை பேர் சாப்பிட்டாலும் அவருடைய கணக்கு மட்டும் தப்பாது.
எவ்வளவு சிறிய பையனாக இருந்தாலும் ‘அண்ணா ’ என்றுதான் அழைப்பார்.
இங்கே நான் மந்தைவெளிக்கு இடம் மாறியவுடன் முதல் வேலையாக கச்சேரி ரோடுக்கு சென்று பார்த்தேன். அந்த இடத்தில் ராயர் கஃபே இல்லை. வேறு இடத்திற்கு மாறி விட்டது என்றார்கள். எந்த இடம் என்று தெரியவில்லை. எதையும் தேடிப் போவது என் வழக்கம் இல்லை; அது வயிற்றுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி; வயிற்றுக்குக் கீழுள்ள பிரச்சினையாக இருந்தாலும் சரி.
அந்த ராயர் கஃபே இருந்த புது இடத்துக்குத்தான் சோமன் என்னை அழைத்துக் கொண்டு போனார்.
(இன்னும் வரும்)
25.7.2008.
-------------------------------------------------
ராயர் கஃபே கச்சேரி ரோட்டிலேயே முன்பு இருந்த இடத்துக்கு எதிரேயுள்ள அருண்டேல் தெருவில் பேயாழ்வார் அவதரித்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கணித மேதை இப்போது இல்லை. இப்போது நாம் சாப்பிட்ட கணக்கையெல்லாம் நாமேதான் கல்லாவின் முன்னே ஒப்பிக்க வேண்டியிருந்தது.
அந்தக் கணித மேதைக்குப் பதிலாக இப்போது ஒரு பொடியன் இருந்தான் கணக்கு வழக்கெல்லாம் தெரியாது. ஆனால் அவனைப் போல் உபசரிக்க இந்த உலகத்தில் ஒருத்தன் பிறந்து வர வேண்டும் என்றார் சோமன்.
பெயர் அருணாச்சலம். ஊர் திண்டிவனம். சிரித்த முகம். முன்பல் இரண்டும் துருத்திக் கொண்டிருக்கும். அவனைப் போல் உபசரிப்பதற்கு ஒருவர் பிறந்து வர வேண்டும். திடீர் திடீரென்று காணாமல் போய் விடுவானாம். மூன்று நாட்கள் ஏதாவது பரோட்டா கடையில் இருந்து விட்டுத் திரும்பி வந்து விடுவானாம்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராயர் கஃபே. இப்போது கரி அடுப்பு இல்லை. கேஸ் அடுப்புதான். ஆனால் அதே ருசி.
சோமன் ஒரு சுவாரசியமான மனிதர். தன்னுடைய பழைய சைக்கிளை உருட்டிக் கொண்டே என்னோடு வருவார். உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களைப் பற்றியும் என்னோடு பேசிக் கொண்டு வருவார்.
குமுதத்தில் ஒரு ஜோக் போட்டு இருக்கான் சார். கேளுங்கள் அந்த ஜோக்கை. தீய்ந்து போன தோசைக்கும், கர்ப்பஸ்த்ரிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
ரெண்டையும் கொஞ்சம் முன்னே எடுத்திருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த போது மணி எட்டு. அப்போதுதான் அவந்திகா எழுந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தாள். பசியோடு வந்திருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும்?
அதனால்தான் சொல்கிறேன்...செந்தில், அந்தப் பக்கங்களை சிரமம் பாராமல் குரியரில் அனுப்பி வைத்து விடுங்கள். நானே வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்கிறேன்.
***
25.7.2008.
6.00 p.m.