எக்ஸைல்
October 22nd, 2011
மேலே நீங்கள் காணும் இணைப்பை என் நண்பர் கண்ணன் பெல்ஜியத்திலிருந்து அனுப்பியிருந்தார். இங்கே ராமகிருஷ்ணன் நிறைய சொல்கிறாரே என்று ஹாருகி முராகாமியின் ஒரு நாவலை வாங்கிப் படித்தேன். செம போர். எனக்கு எந்த எழுத்தாக இருந்தாலும் சுவாரசியமாக இல்லாவிட்டால் படிக்கப் பிடிக்காது. நான் இங்கே சொல்வது சுஜாதாவின் எழுத்தில் உள்ள சுவாரசியம் இல்லை. ஸெர்பிய எழுத்தாளர் மிலோராத் பாவிச்-இன் Dictionary of Khazars நாவலைப் போன்ற கடினமான எழுத்தாக இருந்தாலும் அதிலும் ஒரு சுவாரசியம் இருக்கும். மாரியோ பர்கஸ் யோசாவின் ஒரு டஜன் நாவல்களை இரண்டு முறை படித்தவன் நான். ஆனால் முராகாமி என்னைக் கவரவில்லை. ஒருவேளை அவரது மற்ற நாவல்கள் சுவாரசியமாக இருக்கலாம். அதற்காக அவரது இன்னொரு நாவலை எடுத்து நான் படிக்க விரும்பவில்லை. அவ்வளவு நேரம் எனக்கு இல்லை. ஆனாலும் முராகாமியின் நூல்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்பதைப் பார்க்கும் போது பொறாமையாக உள்ளது. முராகாமியின் சமீபத்திய நாவல் ஒரே மாதத்தில் ஜப்பானில் பத்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் உலகம் பூராவும் மில்லியன் கணக்கில் விற்கிறது.
இங்கே கேரளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயரின் நாலு கட்டு என்ற நாவல் பல லட்சம் பிரதிகள் விற்றன.
இந்தப் பின்னணியில் எக்ஸைல் பற்றி யோசிக்கிறேன். ஒரே வருடத்தில் இந்த நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்கும் என்பது என் கணிப்பு. அல்லது, குறைந்த பட்சம் 50,000 பிரதிகள். உளறுகிறான் என்று நினைக்காதீர்கள். எத்தனையோ பத்திரிகைகள் திமுகதான் வெற்றி பெறும் என்று கணித்துக் கொண்டிருந்த போது நான் திமுக 30 இடங்களுக்குள்தான் வரும் என்று துக்ளக்கில் எழுதினேன். 22 இடங்கள்தான் பெற்றது திமுக. அது போலவே இப்போது கணிக்கிறேன்; எக்ஸைல் குறைந்த பட்சம் 50,000 பிரதிகள் ஒரே வருடத்தில் விற்கும். ஊட்டியில் தங்கி எக்ஸைலை எழுதிக் கொண்டிருந்த போது சுமார் நூறு பேர் என்னிடம் நான் எழுதிய புத்தகங்களைக் கேட்டார்கள். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; ஒருவர் சீனியர் வக்கீல்; ஒருவர் அந்தப் பிராந்தியத்தின் அதிமுக தலைவர்; ஒருவர் தேயிலைத் தோட்ட அதிபதி. இப்படி நூறு பேர். இவர்கள் பதிப்பகத்துக்கு மணியார்டர் அனுப்பி புத்தகம் வாங்க மாட்டர்கள். அது இந்த ஜென்மத்தில் நடக்காது. அவர்களின் வீட்டுக்கு எதிரே உள்ள புத்தகக் கடையில் கிடைத்தால் மட்டுமே வாங்குவார்கள். அந்தப் புத்தகக் கடைக்குச் சென்றேன். தமிழில் உள்ள எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் இருந்தன. என் புத்தகம் இல்லை. மேனேஜர் வந்து என்னிடம் கைகுலுக்கினார். என்னுடன் வந்திருந்த நண்பர் அந்த மேனேஜர் எப்போதும் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார் என்றார். ஆனால் மேனேஜர் என் புத்தகங்களைப் படித்ததில்லை. காரணம், கிடைக்கவில்லை. பத்திரிகைகளில் என் கட்டுரைகளைப் படித்திருக்கிறார். ”நான் உங்களுடைய தீவிரமான ரசிகன்; ஆனால் என் கடையில் உங்கள் புத்தகம் இல்லை” என்றார்.
ஊட்டியில் மட்டும் எக்ஸைல் 250 பிரதிகள் விற்கும். நந்தா, அந்தப் பொறுப்பு உங்களுடையது. நந்தா அந்த ஊரின் பிரபலமான அதிமுக தலைவர்களில் ஒருவர்.
வாசகர் வட்டத்தில் 1500 பேர் உள்ளனர். இவர்களில் எத்தனை பேர் எக்ஸைல் வாங்குவார்கள்? பார்த்திபன், உங்கள் கணக்கு என்ன? பாஸ்கர், நீங்கள் சொல்லும் கணக்கு என்ன? சாருஆன்லைன் வாசகர்களில் எத்தனை பேர் எக்ஸைல் நாவலை வாங்குவீர்கள்? கண்ணன் (பெல்ஜியம்) போன்ற நண்பர்கள் பத்து பிரதிகள் வாங்கி, தனது நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பெயர் குறிப்பிடாதவர்கள் வருந்தத் தேவையில்லை. எல்லோருடைய பெயரும் என் மனதில் உள்ளது. ஒவ்வொருவரும் ஐந்து, பத்து பிரதிகள் வாங்கி, நண்பர்களிடம் கொடுக்க வேண்டும். எக்ஸைலை நீங்கள் ஒரு இலக்கியப் பிரதியாகவும் வாசிக்கலாம்; அதே சமயம், “பணம் சம்பாதிப்பது எப்படி?” என்ற புத்தகமாகவும் வாசிக்கலாம். இப்படிச் சொல்வதால் அதன் இலக்கிய மதிப்பு குறைந்து போகாது. ஏனென்றால், ஜனகனமன என்ற பாடலை நாம் இலக்கியப் பிரதியாகவும் வாசிக்கிறோம்; தேசிய கீதமாகவும் வைத்திருக்கிறோம் என்பது போல.
தமிழர்களிடம் அவ்வளவாக வாசிப்புப் பழக்கம் இல்லை. இதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் அதே சமயம், வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால் இங்கே உள்ளவர்களைப் போல் ஒரு வாசகனை நீங்கள் உலகம் பூராவும் பார்க்க முடியாது. உதாரணமாக, இதாலோ கால்வினோ என்ற இத்தாலிய எழுத்தாளரை இத்தாலியில் தெரிந்தவர்களை விட தமிழ்நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம். அதேபோல் மார்க்கெஸ்; அதேபோல் போர்ஹெஸ். இங்கே உள்ள வாசகர்கள் உலக இலக்கியத்தையே விரல்நுனியில் வைத்திருக்கிறார்கள். வாசகர்களே இப்படி என்றால், எழுத்தாளர்கள் எப்படி இருப்பார்கள்? தமிழ் எழுத்தாளன் அளவுக்குப் பரந்து பட்ட வாசிப்பு அனுபவம் உள்ள எழுத்தாளர்களை உலகில் எந்த மூலையிலும் பார்க்க முடியவில்லை. சர்வதேச இலக்கியக் கருத்தரங்குகளில் நான் குறிப்பிடும் எழுத்தாளர்களைப் பார்த்து மூக்கில் விரல் வைக்கிறார்கள். அப்போது நான் சொல்வேன்; ”எங்கள் ஊரில் நான் கம்மியாகப் படித்தவன். எஸ். ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருக்கிறார். அவரைப் பார்த்தால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள்…”
என் நண்பர்களிடம் நான் அடிக்கடி சொல்வது இதுதான்: நான் எழுத்தாளன் என்பதை விட ஒரு வாசகன் என்பதில்தான் பெருமையும் கர்வமும் கொள்கிறேன். அந்தத் தகுதியில் ஒரு வாசகனாக எக்ஸைல் நாவலை எப்படிப் பார்க்கிறேன்? Milorad Pavic எழுதிய Dictionary of Khazars என்ற நாவலைப் போன்ற ஒரு நாவல் உலகின் எந்த மொழியிலும் எழுதப்பட்டதில்லை. Ronald Sukenik எழுதிய 98.6 என்ற நாவலைப் போன்ற ஒரு நாவல் உலகின் எந்த மொழியிலும் எழுதப்பட்டதில்லை. இவையெல்லாம் ஈடு, இணை இல்லாத unique தன்மை கொண்ட நாவல்கள். அதேபோல் எக்ஸைல் நாவலுக்கு இணையான ஒரு நாவலை நீங்கள் உலகில் எந்த மொழியிலும் பார்க்க முடியாது. இம்மாதிரி முறையில் நான் அறிந்த வரை உலக மொழிகளில் எழுதப்பட்டதில்லை. ஒரு கதாபாத்திரம் ஒரு கதையைச் சொல்கிறது. உடனே இன்னொரு பாத்திரம் வந்து அந்தக் கதையைக் கூறு போட்டு, இன்னொரு கதையைச் சொல்கிறது. நான் மேலே குறிப்பிட்ட டிக்ஷனரி ஆஃப் கஸார்ஸ், 98.6 ஆகிய இரண்டு நாவல்களும் வாசிப்பதற்குக் கடினமானவை. ஆனால் எக்ஸைலை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களும் வாசிக்க முடியும்.
இந்த நாவல் உங்கள் கைகளுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி அன்று கிடைக்கும். நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் டிசம்பர் 6-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு உங்கள் ஊரில் உள்ள கடைகளில் எக்ஸைல் விற்பனைக்கு வரும். அதாவது, டிசம்பர் 6-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடக்கும் வெளியீட்டு விழாவின் போது எக்ஸைல் விற்பனைக்கு வரும் அல்லவா, அதே தினம் அதே நேரம் உங்கள் ஊர்க் கடைகளில் எக்ஸைல் விற்பனைக்கு வரும். கிட்டத்தட்ட ரஜினி பட ரிலீஸ் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். முன் வெளியீட்டுத் திட்டமும் உண்டு. அது பற்றி விரைவில் விபரம் தெரிவிப்பேன். முன் வெளியீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டால் புத்தகம் சலுகை விலையில் கிடைக்கும். வேறு எந்த விபரம் வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் வேண்டும் தாஸன்
சாரு
No comments:
Post a Comment