Friday, 26 April 2013

சாருவிற்கு மீன் சப்ளையர் கிடைத்த கதை (அ) மீன் குஞ்சு உருவான கதை

ஞாநிக்கு ஒரு அஞ்ஞானியின் பதில்…
February 19th, 2012

”ஞாநிக்கு பதில் எழுதுவதாகச் சொன்னீர்களே?  ஏன் இன்னும் எழுதவில்லை?” என்று கேட்டு பல கடிதங்கள் வந்துள்ளன.  ஊர் ரெண்டு பட்டா… என்ற பழமொழி தான் ஞாபகம் வந்தது.  ஞாநி பத்து நிமிஷத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டுப் போய் விட்டார்.  அதற்கு பதில் எழுதப் புகுந்தால் நான்கு ஐந்து மணி நேரம் ஆகும் போல் இருக்கிறது.  ”சாருவுக்கும் எனக்கும் ஒரே வயது” என்றார் ஞாநி.  அது மட்டும் அல்ல; அதை நிறுவுவதற்காக ”சாருவுக்கும் பைபாஸ் ஸர்ஜரி நடந்துள்ளது; எனக்கும் ஆஞ்ஜியோ நடந்துள்ளது; இதோ இந்த வாரம் இன்னொரு ஸர்ஜரி நடக்க உள்ளது” என்று பல உதாரணங்களையும் அடுக்கினார்.   இந்த ஒரு வசைக்கு பதில் சொல்லவே பத்து பக்கங்கள் எழுத வேண்டும் போல் இருக்கிறது.    ஸர்ட்டிஃபிகேட் பிரகாரம் அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.  ஆனால்?  இந்த ஆனாலுக்குத்தான் பத்து பக்கங்கள் எழுத வேண்டும்.
சீனி கம் படம் பார்த்திருக்கிறீர்களா?  அதில் அமிதாப் பச்சன் 64 வயது இளைஞனாக வருவார்.  ஆம்; இளைஞன்.  தபுவுக்கு 34 வயது.  இரண்டு பேருக்கும் காதல்.  அமிதாப் லண்டனில் வசிப்பவர்.    தபுவின் அப்பாவிடம் தங்கள் காதலைச் சொல்லி சம்மதம் கேட்கலாம் என்ற எண்ணத்தில் இந்தியா வருகிறார்.  தபுவின் அப்பா ஓம் பிரகாஷுக்கு அமிதாபை விட 6 வயது கம்மி.  ஆனால் அமிதாபைப் பார்த்ததும் அவர் 90 வயதான இரண்டு கிழவர்கள் சந்தித்துக் கொண்டதைப் போல் பேசுவார்.  என்ன ஜி, வாக்கிங் எல்லாம் போகிறீர்களா?  வயசாகிப் போச்சு… நம்ம வயசுல வாக்கிங் போயே ஆகணும்… இல்லேன்னா கொலஸ்ட்ரால், ஷுகர், ஹார்ட் ப்ராப்ளம்…  இப்போவே பாருங்க… உங்க கிட்ட பேசும் போதே மூச்சு இரைக்குது…  நீங்க என்ன விட 6 வயசு மூத்தவர்னு நீனா (தபு) சொன்னா…  ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோணும்…  இல்லேன்னா அவ்ளோதான்…  சரி, என்ன குடிக்கிறீங்க… டீ தானே?  சீனி கம்?  நான்லாம் சீனியே போட்டுக்கிறது இல்லே…  நேத்து தான் ஆஞ்ஜியோ டெஸ்ட் பண்ணினேன்…  ஒரே ஒரு இடத்துல ப்ளாக் இருக்கு… ஓவர் கொலஸ்ட்ரால்…  நீங்களும் அப்பொப்போ டெஸ்ட் பண்ணிடுங்க…  வாரீஹளா.. நாளைக்கு ஃபுல் பாடி செக்கப்புக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்…?
தபுவைப் பெண் கேட்க வந்த அமிதாபுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…  ஓம் பிரகாஷ் ஒரு சராசரி இந்தியனின் பிரதிநிதி.  ஞாநி தன் வயதையும் என் வயதையும் ஒப்பிட்டு மூச்சு வாங்க மூச்சு வாங்கப் பேசிய போது எனக்கு அச்சு அசல் ஓம் பிரகாஷ் கேரக்டரைப் பார்ப்பது போலவே இருந்தது.  சான்ஸே இல்லை.  என்ன ஒற்றுமை!!!
என்னுடைய நண்பர்கள் அத்தனை பேரும் 30 வயதைத் தாண்டாதவர்கள்.  ஒரு நண்பனோடு பெங்களூர் ஹிண்ட் பப்பில் இரவு 12 மணி வரை குடித்து விட்டு, அறைக்கு வந்து அங்கேயும் குடித்து விட்டு காலை நான்கு மணி அளவில் படுத்தேன்.  காலையில் ஏழு மணிக்கு எழுந்து எக்ஸைல் நாவலை கர்ம சிரத்தையாக எழுதிக் கொண்டிருந்தேன்.   நண்பன் 12 மணிக்கு எழுந்து வாந்தி எடுத்தான்.  நண்பனுக்கு வயது 28.  இதையும் எக்ஸைலில் எழுதி இருக்கிறேன்.  வாசகர் வட்டக் கூட்டங்களில் நான் நண்பர்களுடன் காலை நான்கு மணி வரை நடனம் ஆடுவது சர்வ சகஜம்.  இதை விடுங்கள்.  பைபாஸ் ஸர்ஜரி என்னிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக அந்த மருத்துவமனை செய்த காரியம்.  வெறும் மருந்து மூலமாகவே குறைக்கக் கூடியதாகவே இருந்தது என்று அதற்குப் பின் பல மருத்துவர்கள் அபிப்பிராயப் பட்டனர்.  தவிர, இதுவரை நான் அந்த வலி, இந்த வலி, ஜூரம் என்றெல்லாம் படுத்ததே இல்லை.  கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் படுத்திருக்கிறேன்.  நான் யாருக்கு ஃபோன் செய்தாலும் அவருக்கு உடல்நலம் இல்லை என்கிறார்கள்.  கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஒரே ஒருமுறை தான் சொல்லி இருக்கிறேன்.  இது என் நண்பர்களுக்குத் தெரியும்.  என்னிடம் பணம் இல்லை.  ஆனால் இந்த ஆரோக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றி.
ஆனால் இந்த ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்று நாளொரு தினமும் எழுதிக் கொண்டு வருகிறேன்.  எக்ஸைல் நாவலில் பல பக்கங்களில் இந்த விபரம் உண்டு.  இதை சிரத்தையாகப் பின்பற்றினால் நீங்களும் 90 வயதில் துள்ளிக் குதிக்கலாம்.  நம் சித்தர்கள் சொல்லிக் கொடுத்த அற்புதம் இது.
என் உடம்பு ஒன்றும் இரும்பால் செய்தது அல்ல.  ஆனால் நான் பின்பற்றும் சில வழிமுறைகளால் அப்படி இரும்பாக்கி வைத்திருக்கிறேன்.  தினமும் காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் 5 கி.மீ. தூரத்தை 35 இலிருந்து 40 நிமிட நேரத்தில் நடந்து முடிக்கிறேன்.  நான் குடி கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன்.  ஆனால் காஃபிக்கு அப்படி ஒரு அடிமை.  காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும்.  ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்.  அர்க் தான் குடிக்கிறேன்.  அர்க் என்பது பசு மாட்டின் மூத்திரத்தை distill செய்தது.  தண்ணீர் கலக்காமல் குடித்தால் நாக்கு வெந்து விடும்.  நாற்றத்தில் குமட்டல் வந்து விடும்.  நாலரை மணிக்குக் குடிப்பேன்.  ஏழரைக்கு எழுந்து வரும் அவந்திகாவுக்கு அப்போதும் அறையில் பரவி இருக்கும் மூத்திர நாற்றம் குமட்டல் வருகிறது என்று சொன்னதால், எக்ஸாஸ்ட் ஃபேனைப் போட்டு விட்டுக் குடிக்கிறேன்.  அவந்திகாவிடமிருந்து பாராட்டு பெறுவது ரொம்பக் கஷ்டம்.  அதுவும் நான் என்றால் ரொம்ப ரொம்பக் கஷ்டம்.  அப்படிப்பட்ட அவளே ஒருநாள் நான் இரவில் அர்க் குடிப்பதைப் பார்த்து விட்டு “உன்னைப் போல் சகிப்புத் தன்மை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம்” என்றாள்.  அர்க் குடித்த அன்று காக்டெய்ல் சாப்பிடுவதில்லை.  சாப்பிட்டால் அர்க் வேலை செய்யாது.
அது மட்டும் அல்ல; அர்க் குடித்தால் அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்துக்குத் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.  அர்க் குடித்து விட்டு, நடக்கப் போய் விட்டால் அப்போது ஒரு தாகம் எடுக்கும் பாருங்கள்… கொடுமை.  எதற்கு இவ்வளவு பாடு?  உடம்பு இரும்பைப் போல் இருக்க வேண்டும்.  நோய் நொடி வரக் கூடாது.
இந்த அர்க் என்பது நான் செய்து வரும் ஹட யோகப் பயிற்சி முறைகளில் ஒன்றே ஒன்றுதான்.  இது போல் நூறு விஷயங்கள் இருக்கின்றன.  இன்னொரு உதாரணம், பால் கலந்த எதையும் சாப்பிடுவதில்லை.   தேநீர் என்றால், ஊட்டியிலிருந்து வரவழைத்த white tea.  இது தேயிலைச் செடியின் மொக்குகளிலிருந்து தயாரிக்கப்படுவது.  இல்லை; சரியாகச் சொன்னால், ஒரு தேயிலைச் செடி வளர்ந்து முதல் மொக்கு விடும் நிலையிலேயே எடுத்து விடுவார்கள்.   இப்படி எந்தக் காரியத்திலும் ஒரு ஹட யோகியாகவே வாழ வேண்டும்.  இதனால்தான் சில சாமியார்கள் ‘அந்த’ விஷயத்தில் பெரும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  ஸர்ட்டிஃபிகேட் வயது எனக்கு 59-ஆக இருக்கலாம்.  ஆனால் 25 வயது இளைஞன் கூட என்னோடு எந்த விஷயத்திலும் போட்டி போட முடியாது.  எந்த விஷயத்திலும் என்பதை அழுத்தியே சொல்கிறேன்.  உங்கள் வயது எழுபதா?  நான் சொல்லும் டிப்ஸைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஆறே மாதத்தில் 25 வயது இளைஞனாகி விடலாம்.  காலையில் இஞ்சி; மதியம் சுக்கு; இரவில் கடுக்காய்.  எப்படிச் சாப்பிட வேண்டும்?  கொஞ்சம் மரியாதையோடு கேட்டால்தான் சொல்லுவேன்.
கூட்டத்தை மதியம் இரண்டு மணிக்கு வைத்திருப்பதையும் விமர்சித்தார் ஞாநி.  எல்லோரும் உறங்கும் நேரத்தில் வைத்து விட்டதாகச் சொன்னார்.  மைக் முன்னால் பேசிக் கொண்டிருந்தவர் என் பக்கம் திரும்பி “நீங்களும் உறங்கும் நேரம் தானே இது?” என்று கேட்டார்.  நானும் தலையை ஆட்டி வைத்தேன்.  வேறு என்ன செய்வது?  நான் பகல் நேரத்தில் தூங்கியதே இல்லை.  இரவில் வெகு நேரம் கண் விழிப்பதும் இல்லை.  நாவல் எழுதிக் கொண்டிருந்தால் இந்த விதி பொருந்தாது.  இரவு பகல் எல்லா நேரமும் எழுத்துதான்.  இல்லாவிட்டால் எக்ஸைல் போன்ற ஒரு நாவலை ஐந்தாறு மாதத்தில் எழுதி முடிக்க முடியுமா?
மேலும், நான் எக்ஸைல் பற்றிப் பேசாமல் சக எழுத்தாளர்களைத் திட்டினேன் என்றார்.   இரண்டு மணி கூட்டத்துக்கு அவர் வரும் போது சுமார் நான்கு மணி இருக்கும்.  அதில் தவறு இல்லை.  கூட்டம் முடிவதற்குள் வந்து விட்டால் போதும்.  முன்னாலேயே வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் என் கூட்டத்தில் இல்லை.  அப்படிப்பட்ட சர்வாதிகாரப் போக்குகள் என் வாசகர் வட்டத்தில் கிடையாது.  ஆனால் இரண்டு மணியிலிருந்து ஒவ்வொரு நண்பரும் பேசிய பின் நானும் பேசினேன்.  அதைக் கேட்காமல் ஞாநி  எப்படிக் கருத்து சொல்ல முடியும்?  ஆனாலும் நான் எக்ஸைல் பற்றிப் பேசவில்லை.  ஆனால் நான் ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறேன்.    காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  ஒரு பத்திரிகையில் கட்டுரை வந்து விட்டது என்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? டூ மச் என்றார் நண்பர் ஒருவர்.  ”ஒரு” பத்திரிகையில் இல்லை என்பதுதான் விஷயம்.  சென்னை, கல்கத்தா, மும்பை, தில்லி மட்டும் அல்ல; லண்டன் வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும்படி எழுத வேண்டும்.  இது எப்படி என்றால், தமிழ் சினிமாவில் யாருமே வட இந்தியா பக்கம் செல்ல முடியவில்லை.  நடிகைகள் மட்டுமே விதி விலக்கு.  ரஜினி, கமல், இளையராஜா யாராலும் முடியவில்லை.  சிவாஜியால் கூட முடியவில்லை.  முதல் முதலாக அதை உடைத்தவர்கள் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும்.  பிறகு ரஹ்மான் இந்திய எல்லையையும் தாண்டி ஹாலிவுட் சென்றார்; வென்றார்.  நான் ஏஷியன் ஏஜ் லண்டன் எடிஷனில் எழுதுவது ரஹ்மான் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பதற்கு ஒப்பாகும்.  அதனால்தான் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.  அது சரி, ரஹ்மான் இறைவனுக்கு நன்றி சொன்னால் இனிக்கிறது; நான் சொன்னால் மட்டும் கசக்கிறதா?  இதில் அடங்கியுள்ள மர்மம் என்ன?  சொல்ல முடியும்…  சாதி, மதம் பேசுகிறேன் என்பார்கள் …
Love, in pixels -ஐ எழுதும் போது அது லண்டன் எடிஷனுக்கும் போகிறது என்று எனக்கு உறைக்கவில்லை.  பிறகுதான் ஞாபகம் வந்ததும் கலவரம் ஆகி விட்டது.  எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் columnists யாரையும் பிடிப்பதில்லை; வினோத் மேஹ்தாவும், குஷ்வந்த் சிங்கும் மட்டுமே விதி விலக்கு.  அவர்களை நான் தாண்ட வேண்டும்.  அதனால்தான் லோக்கல் இலக்கிய பாலிடிக்ஸ் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன்.  இறைவனின் அருளால் வினோத் மேஹ்தாவையும் சர்தாரையும் தாண்டிச் செல்வேன்.  வாசகர் வட்ட நண்பர்களின் அன்பு ஒன்று போதும்.  நேற்று போரூரிலிருந்து விரால் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் கணேஷ் அன்பு.  அவருடைய அன்பை நான் என்னவென்று சொல்வது?  இங்கே மைலாப்பூர், ஆர்.ஏ.புரம் ஏரியாவில் விரால் மீனே கிடைப்பதில்லை என்று ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.  அதனால்தான் போரூரிலிருந்து விரால்மீனைக் கொண்டு வந்து விட்டார்.  கணேஷ் அன்புவைப் போல் சுமார் 50 பேர் இருக்கிறார்கள்.  அவர்களின் அன்பும் இறைவனின் அருளும் என் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சக்தியை எனக்குக் கொடுக்கும்…

1 comment:

  1. ஜெமினி வாசன் எப்ப்போதே போய்விட்டாரே மாங்காய் மண்டை

    ReplyDelete