எக்ஸைல் பற்றி…
October 11th, 2011
October 11th, 2011
ஊண் உறக்கம் இல்லாமல் நாவலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழில் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியைத் தாண்டும் வகையில் ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது. இப்போது அந்த ஆசை பூர்த்தியாகி விட்டது. எக்ஸைலைப் படிக்கும் போது இதை நீங்கள் உணர்வீர்கள். உலகின் மிகச் சிறந்த 50 நாவல்களில் எக்ஸைலும் ஒன்றாக இருக்கும். அதை விட இன்னொரு விஷயம், உலகில் எந்த நாவலிலும் கதாபாத்திரங்களே நாவலை எழுதியதில்லை. உதாரணமாக, எக்ஸைலில் ஒரு பாத்திரம் பயங்கர ஆணாதிக்கவாதி. அவன் பேசும் ஒரு வார்த்தையில் கூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அவன் இந்த நாவலில் ஒரு முக்கியமான பாத்திரம். மேலும், ஒரு விஷயம். எக்ஸைலில் வரும் பகடி அளவுக்கு உலக நாவல்களிலேயே அரிது. சமீபத்தில் என் தோழியிடம் அந்த நாவலில் வரும் சொய்ங் வாத்தியார் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தோம். சொல்லும் போது சிரித்து சிரித்து என் கண்களில் கண்ணீர் ஊற்றுகிறது. தோழிக்கும் அப்படியே. ரெஸ்டாரண்டே எங்களை வேடிக்கை பார்த்தது. பத்து நிமிடம் சிரித்துக் கொண்டே இருந்தோம். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். சொய்ங் வாத்தியார்.
இந்த சிறப்பையெல்லாம் நானே சொல்லிக் கொள்வது பற்றி எனக்கு எந்த லஜ்ஜையும் இல்லை. நான் ஒரு கருவியே. எழுதியது இறைவி. என்னை ஆட்கொண்ட சோட்டாணிக்கரை பகவதி.
மேலும், நம் பெருமைகளை நாமே தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருப்பது தமிழ்நாட்டின் அவலங்களில் ஒன்று. ஏனென்றால், ஸீரோ டிகிரி ஒரு lipogrammatic நாவல். உலகில் இதுவரை இரண்டே இரண்டு லிப்போக்ரமாட்டிக் நாவல்கள்தான் எழுதப்பட்டுள்ளன. ஜார்ஜ் பெரக் எழுதிய La Disparition (ப்ரெஞ்ச்) மற்றும் வால்டர் அபிஷ் எழுதிய Minds Meet (ஆங்கிலம்). மூன்றாவது, ஸீரோ டிகிரி (தமிழ்). இதையும் நானே தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாடே கொண்டாடி, பெருமைப்பட்டிருக்க வேண்டிய விஷயம் இது. ஆனால் நடக்கவில்லை. லிப்போக்ரமாட்டிக் என்றால் என்ன? ஃப்ரெஞ்சில் e என்ற எழுத்து இல்லாமல் ஒரு வாக்கியத்தைக் கூட எழுத முடியாது. பெரக் e இல்லாமல் 311 பக்க நாவலை எழுதியிருக்கிறார். அதேபோல் தமிழில் ஒரு என்ற வார்த்தை இல்லாமல் ஒரு நாவலை எழுதுவது சாத்தியமே இல்லை. நான் ஸீரோ டிகிரியை அப்படி எழுதியிருக்கிறேன். மேலும், அதில் கமாவும் மற்ற குறிகளும் கிடையாது. முற்றுப் புள்ளி மட்டுமே உண்டு.
சமீபத்தில் வந்த கடிதம் ஒன்று இது.
டியர் சாரு,
கடந்த ஒரு வருடமாக தங்களை தங்களின் எழுத்துகளின் வழியே தரிசித்துவருகின்றேன் ,உங்கள் எழுத்து என்னை பல நிலைகளில் விழிப்புனுர்வு அடைய வைத்துக்கொண்டிருக்கின்றது .நான் உங்கள் எழுத்தை பற்றிக்கொண்டு சென்றுகொண்டே இருக்கின்றேன் ,எந்த விஷயத்தை யாரிடம் பேசினாலும் உங்களை பற்றி பேசாமல் , மேற்கோள் காட்டாமல் இருக்க முடியவில்லை . உங்கள் புத்தகமோ,எழுத்தோ என்னிடம் இல்லாலத நேரங்களில் நான் வெறுமையுடனும் பதற்றத்துடனும் இருக்கின்றேன் ,எனக்கு உங்களையும் நீங்கள் காட்டும் எழுத்தாளர்களயும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என தோன்றுகின்றது. தங்களை ஒருமுறை உங்கள் வீட்டில் சபரிமலைக்கு செல்லும் முன் நடந்த பூஜையில் கலந்து கொண்டு சந்தித்திருக்கின்றேன்.(மறக்க முடியாத நாள்).தங்களுக்காக எதைவேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் உங்கள் தீராத வாசகனாக இருக்க விரும்புகின்றேன்.
நான் அறிந்த வரை தமிழுலகில் 1.பாரதி ,2.பெரியார், 3.சாரு நிவேதிதா.
இப்படிக்கு,
தேனில் சிக்குண்ட வண்டாக உங்கள் எழுத்துகளில் மூழ்கி கிடக்கும்,
தஞ்சாவூர் சம்பந்தர்.
டியர் சம்பந்தர்,
உங்கள் கடிதம் என்னை நெகிழ வைத்தது. வரும் சனி ஞாயிறில் நடக்கும் வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------
எக்ஸைல் (மீண்டும்)
April 26th, 2013
என்னுடைய 50 ஆண்டுக் கால வாசிப்பு அனுபவத்திலேயே என்னை அதிகம் கவர்ந்த எழுத்தாளர் என்று Mario Vargas Llosa-வைச் சொல்லுவேன். அவருடைய ஒரு டஜன் நாவல்களையும் இரண்டு இரண்டு முறை படித்திருக்கிறேன். ஆனால் அவர் என் எழுத்தை மாற்றி விடவில்லை.
நிகோஸ் கஸான்ஸாகிஸ் என் குரு. என் வாழ்க்கைப் பார்வையை மாற்றியவர். ஆனால் அவர் என் எழுத்தை மாற்றி விடவில்லை.
மற்ற என்னுடைய transgressive writing comrades ஆன வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், ஜார்ஜ் பத்தாய் அனைவரும் boring writers. பத்து பக்கத்துக்கு மேல் படிக்க முடியாது.
ஹுலியோ கொர்த்தஸார் என்னை ஓரளவு பாதித்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அவரும் external ஆகத்தானே தவிர உள்வயமாக அல்ல; உணர்வுபூர்வமாக அல்ல. இந்த நிலையில் என் வாழ்வில் முதல் முறையாக ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது, எக்ஸைல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்போது ஒரு ஆங்கில நாவலைப் படித்து விட்டு, அதன் எக்கச்சக்கமான பாதிப்பில் எக்ஸைலின் தமிழ் மூலத்தில் சில விஷயங்களை நீக்கி விட்டு, சுமார் 200 பக்க அளவில் புதிதாக எழுதிச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். நாவலின் பல பகுதிகள் வெற்றிடமாக இருப்பதாகத் தோன்றியதே இதற்குக் காரணம். இப்படித் தோன்ற வைத்தது நான் படித்துக் கொண்டிருக்கும் நாவல். என் வாழ்வில் இந்த அளவுக்கு என் எழுத்தை பாதித்த நாவல் வேறு எதுவும் கிடையாது என்று திண்ணமாகச் சொல்வேன்.
ஏற்கனவே எழுதி வெளியாகி பல்லாயிரம் (?!) வாசகர்கள் வாங்கிப் படித்த நாவலில் இப்படி மீண்டும் 200 பக்கங்களை எழுதிச் சேர்க்கலாமா என்று எனக்கு சந்தேகம். அதிலும் நாவலின் கடைசியில் அல்ல; இடையிடையே. மனுஷ்ய புத்திரனுக்கு போன் போட்டுக் கேட்டேன். தாராளமாகச் சேர்க்கலாம் என்றார். ஒரு ருஷ்ய நாவலை அதன் ஆசிரியர் பத்து தடவைகளுக்கு மேல் மாற்றி எழுதியிருக்கிறார் என்றார். அதாவது, கையெழுத்துப் பிரதியை அல்ல. ஒவ்வொரு பதிப்பு வரும் போதும் மாற்றுவாராம். (இரண்டு வருடமாக உங்களை மிஸ் பண்ணினேன் ஹமீது…)
அதனால் தைரியம் வந்து விட்டது. இப்போதைய எக்ஸைல் ராஸ லீலாவை விட அமர்க்களமாக இருக்கும். ஆனால் ஜனவரி புத்தக விழாவுக்குள் வருமா என்ற கேள்விக்கெல்லாம் பதில் கிடையாது. 50,000 பிரதிகள் விற்றால்தான் அப்படி நான் ரிஸ்க் எடுக்க முடியும். எனவே எப்போது முடியுமோ அப்போதே முடியும்.
சரி, என்னை அந்த அளவுக்கு பாதித்த நாவல் எது தெரியுமா? தாருண் தேஜ்பால் எழுதிய the Alchemy of Desire. இந்த நாவல் நானே எழுதியது போல் இருந்தது. ஒவ்வொரு வார்த்தையிலும் நான் என்னைப் பார்த்தேன். தாருணுக்கு போன் போட்டு சொன்னேன். ”உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி” என்றார். இலக்கியத்தில் மட்டும் நட்போ, பெருந்தன்மையோ, நன்றிக் கடனோ எதுவுமே பார்ப்பதில்லை என்று சொல்லவில்லை; சொல்லக் கூச்சமாக இருந்ததால் மெஸேஜ் செய்தேன்.
No comments:
Post a Comment